Thursday, August 19, 2010

சமுத்திரக் கனி

சின்னத் திரையில் அழுத்த முத்திரை... 'நாடோடிகள்' படம் மூலம் வெள்ளித் திரையில்



அதிரடி முத்திரை... சமுத்திரக் கனியை சந்தியுங்கள்!

"விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் கிராமம் எனக்கு. விவசாயக் குடும்பம். எட்டாவது படிக்கும் வரை சினிமா பார்ப்பது குற்றம், அதைப் பத்திப் பேசுறது அதைவிடத் தப்பு என இருந்த சூழல். அப்ப நாங்க குரூப் ஸ்டடின்னு கிளம்புவோம். ஒரு சமயம், என்னதான் இருக்கும்னு ராத்திரி 'அலைகள் ஓய்வதில்லை' படம் பார்த்தேன். அவ்வளவுதான். அநேகமாக அடுத்து தியேட்டருக்கு வருகிற எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

15 வயதில் அப்பா பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குத் தெரியாமல், சென்னைக்கு பஸ் ஏறினேன். எங்கே இறங்கணும், எப்படிப் போகணும், யாரைப் பார்க்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை. ஒரு டைரியில் டி.ராஜேந்தர், பாக்யராஜ் முகவரிகள் மட்டும் இருந்தன. சென்னையில் தாம்பரம் நுழைந்ததும் 'எங்கே இறங்குறீங்க'ன்னு கண்டக்டர் கேட்டுக்கிட்டே இருந் தார். சென்னையில் நான் எதிர்கொண்ட முதல் கேள்விக்கே எனக்குப் பதில் தெரியலை.

மவுன்ட் ரோட்டில் கடைசி ஆளாக என்னை இறக்கிவிட்டார்கள். ஜெமினி பாலத்தின் அடியில் இருந்த நீண்ட இடைவெளியில் படுத்து உறங்கினேன். நல்ல உறக்கத்தில் போலீஸ் ஏட்டின் கைத்தடி என்னை உலுக்கியது.'சினி மாவில் நடிக்க வந்தேன். இங்கே இறக்கிவிட்டுட்டாங்க. தூங்குறேன்'னு சொன்னேன். 'இங்கேலாம் தூங்கக் கூடாது'ன்னு சொல்லி என்னை சைக்கிள்ல உக்காரவெச்சு அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனார். காவல் நிலையத்தின் தரையில்பேப் பர் விரிச்சு சென்னையில் என் முதல்நாள் இரவுத் தூக்கம் கழிந்தது.

மறுநாள் டி.ராஜேந்தர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்க்கவே முடியவில்லை. பாக்யராஜ் சார் வீட்டை நெருங்கவே முடியவில்லை. கையில் இருந்த பணம் கரைஞ்சுபோச்சு. சரி, வீட்டுக்குப் போய் காசைத் தேத்திட்டு மறுபடியும் வருவோம்னு நினைச் சுட்டு மிச்சம் இருந்த 20 ரூபாய்க்கு எதுவரை பஸ் போகும்னு கேட்டேன். விழுப்புரம் வரைன்னு சொன் னாங்க. அப்போ நான் நின்னுட்டு இருந்த இடம் எஸ்.எல்.என். ஹோட்டல். 'எனக்கு ஊருக்குப் போக இன்னும் 25 ரூபாய் வேணும். அவ்வளவு காசு சம் பாதிக்கணும். ஏதாவது வேலை கொடுங்க'ன்னு கேட்டேன். '25 ரூபா இப்பவே தர்றேன். ஊருக்குப் போ'ன்னு முதலாளி சொன்னார். ஆனா, நான் நாலு நாள் வேலை பார்த்துட்டுத்தான் காசு வாங்குவேன்னு சொல்லி வேலை பார்த்தேன்.

ஊருக்குத் திரும்பினேன். வீடு அமளிதுமளியா இருக்கு. போலீஸுக்குத் தகவல் சொல்ல, தெரிந்த வீட்டுக்கு எல்லாம் போயி அலசிக் கண் சிவந்து, அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. போனால் கட்டிப்பிடிச்சிக் கதறி அழறாங்க. கொஞ்ச காலம் அமைதியா இருந்தேன். ப்ளஸ் டூ முடிச்சேன். அப்புறம் அம்மாகிட்டேயே 1,000 ரூபாய் வாங்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு அலைஞ்சேன். ஒரு இயக்குநர், 'உங்க ஊர்ல முகம் பார்க்கிற கண்ணாடியே விக்காதா?ன்னு கேட்டார். கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டி.வி-யில் பரபரன்னு இருந்த டைரக்டர் சுந்தர் கே.விஜயனைப் பார்த்தேன். 'நீ படிப்பை முடிச்சுட்டு வா. பார்க்கலாம்'னு நம்பிக்கை கொடுத்து அனுப்பினார். ஊருக்கு வந்தேன். பி.எஸ்ஸி., கணிதம் படிச்சேன். அம்மா ஆசைக்குத் தலை வணங்கிட்டேன். இதுக்கு இடையில் என் அப்பா இறந்துட்டார்.

இனிமேல் சினிமாதான்னு திட்டவட்டமா முடிவு செய்துட்டு மறுபடி சென்னைப் படையெடுப்பு. இப்பக் கொஞ்சம் சுலபமாக இருந்தது. பக்குவம் பிடிபட்டு இருந்தது. நண்பர்கள் கிடைச்சாங்க. நகரத்தின் சாமர்த்தியம் புரிந்தது. கொஞ்சம் நகரத்தோட பழகும் வித்தை தெரிந்தது. சுந்தர் கே.விஜயன் 12 சீரியல்களுக்கு மேல் பரபரப்பாக இயங்கினார். அவருக்குத் துணையாக நான் இருந்தேன். நேரம் காலம் இல்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்தேன். 'டைரக்ஷனுக்கு வா'ன்னு சுந்தர் சார் சொன்னார். அதுவரைதள்ளி வெச்சிருந்த நடிப்பு தாகத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சேன்.

கே.பாலசந்தர் சார் கூப் பிட்டார். அவரோடு படங்களில், சீரியல்களில் இறங்கினேன். அவரோட மலைச்சுப்போகிற அனுபவம் எனக்கும் கை கொடுத்தது. அப்புறம்தான் எஸ்.பி.பி. சரண் 'உனக்குப் படம் தர்றேன் வா'ன்னு சொல்லி 'உன்னைச் சரண் அடைந்தேன்' படம் கொடுத்தார். படம் வெளியாகி நல்ல மரியாதை கிடைச்சது. அந்தப் படம் பார்த்துட்டு ஞானவேல் சார் ஒரு பெரிய தொகை கொடுத்து கதை, திரைக்கதை இருக்கு. டைரக்ஷன் பண்ணுன்னு சொன்னார். விஜயகாந்த் நடிச்ச 'நெறஞ்ச மனசு'. மனசை செலுத்தித்தான் டைரக்ஷன் பண்ணினேன். ஆனாலும் வெற்றி இல்லை. மறுபடியும் 'அண்ணி', 'செல்வி'ன்னு சின்னத்திரை வேட்டை.

கையில் 'நாடோடிகள்' திரைக்கதை இருந்தது. நான் அதைச் சொல்லாத நடிகர், தயாரிப்பாளர் கிடையாது. நாலு பேர் சப் ஜெக்ட்டான்னு நடிகர்கள் பின்வாங்கினாங்க. அவங்களைப் பார்த்துட்டு தயாரிப்பாளர்களும்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் சசிக்குமார் போன். ' 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படம். உங்களுக்கு ஒரு கேரக்டர். முடி வளர்க்க ணும். சம்மதமா?'ன்னு கேட்டார். அடடா, இத்தனை வருஷத்துக்குப் பின்னாடி என்னை நடிக்கக் கூப்பிடுறார். 'சரி நண்பா'ன்னு சொல்லி கதையே கேட்காமல், நடிச்சேன். நல்ல பெயர்.அவர்கிட்டேயே 'நாடோடிகள்' சொன்னேன். 'நிச்சயம் பண்ணலாம். ஜனங்க என்னை ஏத்துக்கிட்டா, நான் நடிக்கிறேன்... ப்ராமிஸ்'னு சொன்னார். எனக்கான கதவைத் திறந்து பெரிய வெளிச்சம் காட்டினார். படம் அபாரமான வெற்றி. இன்று அவரது இயக்கத்தில் அனல் தெறிக்கிற பெரிய கேரக்டர். கேள்விப்பட்டு மோகன்லால் அவர் படத்துக்குக் கூப்பிடுகிறார். வெற்றிமாறன் கதை சொல்லிட்டு, 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'கிறார். எல்லாம் சரி. இதற்கெல்லாம் அடிப்படை...?

நான் எப்பவும் என் நம்பிக்கையைக் கைவிட்டது இல்லை. எத்தனை தடவை ஊருக்குப் போய் வந்தாலும் என் கனவு சென்னையில்தான் இருந்தது. என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிற, இன்னும் கிராமத்தைவிட்டு விலகாத அம்மா கமலா எனக்கு ஆத்ம பலம். மாமா எப்படியும் பெரிய டைரக்டர் ஆவார்னு நம்பி எனக்குக் கழுத்தை நீட்டிய அக்கா பொண்ணு ஜெயலட்சுமி இல்லேன்னா... நான் இல்லை.

போதனை பண்ணுகிற அளவுக்கு நான் சாதிக்கலை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒண்ணும் கிடைக்கலைன்னு சொல்லிட்டு திரும்பிவிடக் கூடாது. உங்க ளுக்கான மகுடம்

No comments: